ஒரு நாள் ஒரு மரம் வெட்டும் விறகுவெட்டி காட்டுக்குள் மரம் வெட்டிக்கொண்டு இருந்தார். அப்போது யாரோ கத்துவது போல சத்தம் கேட்டது. அவர் “என்ன சத்தம்” என்று அருகில் சென்று பார்த்தார். அங்கே ஒரு சிங்கம் கூண்டுக்குள் அடைந்து கிடந்ததை அவர் கண்டார். அதைப் பார்த்ததும் யாரோ ஓர் வேட்டைக்காரன் தான் சிங்கம் கூண்டில் பிடித்து வைத்துள்ளார் என விறகு வெட்டி தெரிந்து கொண்டார்.
சிங்கம்: என்னைக் காப்பாத்துங்க…. காப்பாத்துங்க…..
விறகுவெட்டி: “நான் உன்னை காப்பாற்றும் எண்ணம் கொண்டு வெளியே விட்டால் நீ என்னை கொன்று விடுவாய் அல்லவா?”
சிங்கம்: “என்னை தயவு செய்து காப்பாற்றுங்கள் நான் மிகவும் அடிப்பட்ட சிங்கம் நான் உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன்.”
என கெஞ்சியது….
மனம் இறங்கிய விறகு வெட்டி சிங்கத்தின் கூண்டை திறந்து விட்டார்.
சிங்கம் உடனே அவர் மீது பாய்ந்தது.
விறகுவெட்டி: “நன்றி மறந்த சிங்கமே, இது உனக்கே நியாயமா?”
சிங்கம்: “என்னுடைய குணம் வேட்டையாடுவது என தெரிந்தும் நீ என்னை திறந்து விட்டது உன் தப்பு.”
என்று கர்வமா கர்ச்சித்தது…
தன்னுடைய தவறை எண்ணி வருத்தப்பட்ட விறகு வெட்டி, இது தான் என் தலைவிதி என்று நினைத்துக்கொண்டார்.
அப்போது அந்தப்பக்கமாக ஒரு நரி வந்தது.
விறகுவெட்டி: “என்னைக் காப்பாற்றுங்கள் நரியாரே!”
என விறகு வெட்டி கெஞ்சியதும்…
நரி அவருக்கு உதவி செய்ய எண்ணியது.
நரி: “இது எப்படி நடந்தது?”
சிங்கம்: “நான் அந்த கூண்டின் உள்ள மாட்டிக்கொண்டேன்.”
என்று சிங்கம் கதையை சொல்ல ஆரம்பித்தது.
நரி: “நீ எவ்வாறு கூண்டுக்குள் மாட்டிக்கொண்டாய், விறகு வெட்டி எவ்வாறு உன்னை காப்பாற்றினார்?”
என நரி பல கேள்விகளை கேட்டது.
அப்போது சிங்கம் எல்லாவற்றையும் நடித்துக் காட்ட ஆரம்பித்தது.
சிங்கம்: “நான் இந்த கூண்டில் இவ்வாறு தான் இருந்தேன்.”
என்று சொல்லிக் கொண்டே கூண்டிற்குள் சென்றது.
உடனே நரி அந்த கூண்டின் கதவை மூடிவிட்டது.
சிங்கம்: “நீ எவ்வாறு இதை செய்யலாம்? நீ நியாயம் சொல்லத்தானே வந்தாய் என்று கர்ச்சித்தது.”
நரி: “உன்னுடைய குணம் வேட்டயாடுவது போல் என்னுடைய குணம் மற்றவர்களை ஏமாற்றுவது.உன் குணத்தை எப்படி உன்னால் விடமுடியாதோ அது போல என்னுடைய குணத்தையும் என்னால் மாற்றிக்கொள்ள முடியாது.”
என்று கூறி…
அந்த விறகுவெட்டியை காப்பாற்றியது நரி
ஆகவே குழந்தைகளே நமக்கு நன்மை செய்பவர்களுக்கு ஒரு போதும் நாம் தீங்கு செய்யக் கூடாது. அது நன்றி கெட்ட குணமாகும்.
குமுதம் சதாசிவம்.