ஒரு ஊரில் முனுசாமி என்ற ஏழை ஒருவன் தன் மனைவியுடன்ஒரு சிறிய குடிசையில் வாழ்ந்து வந்தான். அவனுக்கு அதிக வயது ஆகி விட்டதால் வேலை செய்ய மிகவும் கஷ்டப்பட்டான்.
அதனால் தன்னிடம் உள்ள பொருட்களை விற்று , உணவுப் பொருட்களை வாங்கி உயிர் வாழ்ந்து வந்தனர். நாட்கள் செல்ல செல்ல எல்லாப் பொருள்களும் விற்ற பிறகு சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்பட்டார்கள்.என்ன செய்வது என்று தெரியாமல் கடவுளிடம் முறை இட்டனர்.
“இறைவா எங்களால் என்ன செய்வது என்றே தெரியவில்லை . எங்களுக்கு ஏதாவது உதவி செய் என்று அழுதனர்.”
இதைக் கேட்டு மனம் இறங்கிய கடவுள்
” நான் உனக்கு ஒரு வாத்தை பரிசாகக்
கொடுக்கிறேன். அது ஒரு தங்க முட்டை இடும் வாத்து. அது தினமும் ஒரு தங்க முட்டை இடும். அதை விற்று உனக்கு வேண்டிய பொருட்களை வாங்கி சந்தோஷமாக இருங்கள் “என்று சொல்லி
இறைவன் மறைந்தார்.
இறைவன் சொன்ன படியே வாத்து தினமும் ஒரு தங்க முட்டை இட்டது. அதை
விற்று முனுசாமியும் அவன் மனைவியும்
தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்.
ஒரு நாள் முனுசாமியின் மனைவிக்கு ஒரு யோசனை தோன்றியது. ” இந்த வாத்து தினமும் ஒரு முட்டை தான் இடுகின்றது.இதை வைத்துக் கொண்டு
நாம் ஒரு நாளும் பணக்காரன் ஆக முடியாது. எனவே நாம் வாத்தின்
வயிற்றை திறந்து எல்லா தங்க முட்டைகளையும் எடுத்துக் கொண்டு பணக்காரர்கள் ஆகி விடலாம் ” என்று சொன்னாள்.முனுசாமியும் அது சரியான உத்தி என்று நினைத்தான்.
அதன் படி முனுசாமி வாத்தை கொன்று, பிறகு அதன் வயிற்றை கிழித்தான். ” ஐயோ தங்க முட்டைகள் எதுவும் காணோமே. வெறும் குடல்கள் மட்டும் தானே இருக்கிறது, “என்று சொல்லி வருந்தினான்.
பொன் முட்டையிடும் வாத்து இல்லாமல்
அவர்கள் வறுமையில் கஷ்டப்பட்டார்கள்.
தங்களுடைய பேராசையால் இந்த நிலைக்கு வந்தது குறித்து வெட்கப் பட்டனர்.மறுபடியும் முன்பு மாதிரி சாப்பிட வழி இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.கடைசியில் பட்டினியால் இறந்தும் போனார்கள்.
ஆகவே குழந்தைகளே ஆசை பேராசையாக மாறினால் அது ஒருவரை தரித்திரத்திலும் பெரிய நஷ்டத்திலும் கொண்டு போய் விடும்.
பேராசை பெரும் நஷ்டம்.
குமுதம் சதாசிவம். – ஆக்லாந்து. (Kumudham Sadasivam – Auckland)